முகலாய் குருமா

தேவையானவை ;
மட்டன் (இளசாக) 500 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
சைனாப்பூண்டி 50 கிராம்
தக்காளி 100 கிராம்
எலுமிச்சம்பழம் 1
பச்சை மிளகாய் 10
பட்டை 1 துண்டு
கிராம்பு 6
சோம்பு, ஜீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் 4
மிளகுத்தூள் சிறிது
தேங்காய்ப்பூ 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு 50 கிராம்
கறிவேப்பிலை சிறிது
புதினா சிறிது
தூள் உப்பு தேவையானது
நெய் 1 டேபிள் ஸ்பூன்
கோல்டுவின்னர் 100 மில்லி
மட்டன் துண்டுகளை அலசி 1/2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்துவிடவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய்,
முந்திரிப்பருப்பு, பூண்டு ஆகியவற்றை தனித்தனியே அரைத்து வைக்கவும்.
மட்டனை எடுத்து, அரைத்து பூண்டுடன் பிசறி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
செய்முறை ;
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை கிராம்பு, சோம்பு, ஜீரகம், கறிவேப்பிலை, தட்டிய ஏலக்காய் ஆகியவற்றைப் பொரித்துக்கொண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து சிவக்க வதக்கவும். மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு தக்காளியைப் போட்டு சுருள வதக்கிக் கொண்டு, மீதியுள்ள எண்ணையைவிட்டு, அரைத்த பச்சை மிளகாய், பிறகு முந்திரி, கடைசியாக தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, வேகவைத்த மட்டன் அதிலுள்ள நீர் ஆகியவற்றைச் சேர்த்து தக்க உப்பு சேர்த்து சற்று கொதிக்கவிடவும். (அடி பிடித்துவிடாமல் அவ்வப்போது கிளறி விடவும்) இரண்டு கொதிவந்ததும், நெய்யை விட்டு, ஆய்ந்து கழுவிய புதினாத் தழைகளைத் தூவி எலுமிச்சை சாற்றைவிட்டு இறக்கிவைத்து மூடிவிடவும் 1/2 மணி கழித்து எடுத்துப் பரிமாறவும். சப்பாத்தி, பராத்தா, இடியாப்பம், இட்லி, ஃப்ரைடு ரைஸ், பிரியாணி எல்லாவற்றுடனும் சேரும் ஜோக்கர் குழம்பு இது.
குருமா மிகவும் கெட்டியாக இருந்தால் இறக்குவதற்குமுன் சிறிது பால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.