காளான் பிரியாணி

தேவையானவை :
பச்சரிசி - 1 கோப்பை                                          
துண்டுகளாக நறுக்கிய காளான் - 1 கோப்பை
நெய் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி    
மசாலா விழுது - 1 தேக்கரண்டி
இலவங்கம் பட்டை,
ஏலக்காய்த் தூள்,
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1 சிட்டிகை
கடுகு, மல்லித் தழை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இலவங்கைப் பட்டையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் கொதித்து வரும்போது அரிசியை களைந்து போட வேண்டும். அரிசி பாதி வெந்ததும் பொடி செய்த இலவங்கப் பட்டை, ஏலக்காய்த் தூள், சிறிது உப்பு போட்டு மூடி வைக்கவும். அடுப்பை ஒரே சீராக எரியவிடவும். சோறு பதமாக வெந்ததும், இறக்கி ஒரு தட்டில் போட்டு உதிர் உதிராக பொலபொல என்று வைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் நெய் முழுவதையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருபபைப் போட வேண்டும். அவை சிவந்து வெடித்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய காளான், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள் போட்டு அவற்றுடன் மசாலா விழுது, உப்பு, மிளகுத் தூள் போட்டு நன்றாகக் கிளறி விடவும்.  பின் தண்ணீர் ஊற்றி மூடிவைக்கவும். அடுப்பை ஒரே சீராக எரியவிட வேண்டும்.
எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்றாக வெந்ததும் இறக்கி உதிர்த்து வைத்துள்ள சோற்றில் கலந்து கிளறி வைக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் மல்லித்தழையைக் கிளறித் தூவவும். இதுவே காளான் பிரியாணி.
இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். விருந்தினர்களுக்கும் பரிமாறிப் பாராட்டுப் பெறலாம்.