முருங்கைக்கீரை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?
கைக்குத்தல் அரிசி - 2 கப், தேங்காய் பால் - 1 கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, முருங்கைக்கீரை - 2 கப், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு -அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை-அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கேரட் துருவல் - 1 கப்.
எப்படிச் செய்வது?
கைக்குத்தல் அரிசியை உப்புமா ரவையாக உடைத்துக் கொள்ளவும், தேங்காயைத் துருவி 1 கப் பால் எடுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி, பச்சை மிளகாயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும். முருங்கைக்கீரையை கழுவி வடிகட்டி வைக்கவும். கேரட்டை கழுவி, தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடி கனமான கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை வேர்க்கடலையை தாளிக்கவும்.
பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் - இஞ்சி விழுது சேர்த்துக் கிளறிய பிறகு, முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவும், அதில் கேரட் துருவல் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு அரை கப் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதித்ததும், கைக்குத்தல் அரிசி ரவையைத் தூவவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சிறிது ஆறிய பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து, பிடி கொழுக்கட்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
என்ன சிறப்பு ?
முருங்கைக்கீரை கொழுக்கட்டை சத்து நிறைந்தது.
ஆவியில் வேக விடுவதால் எளிதில் ஜீரணமாகும். வயிறும் நிரம்பும். செய்வதும் மிக சுலபம். அதிக செலவில்லாததுகூட.
பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள். காலைச் சிற்றுண்டிக்கு ஏற்றது.
சுவையானது மட்டுமல்ல... பார்ப்பதற்கே வெள்ளை, பச்சை, ஆரஞ்சு நிறத்துடன் மிகவும் அழகாக இருக்கும்.
- உஷா, சென்னை-4.